×

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரில் நச்சு கலக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி சென்று கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ஆறாக உள்ளது. அதன் பிறகு கழிவுநீர் கலந்து சாக்கடை ஆறாக மாறிவிடுகிறது. திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிகளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்துமிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் 4 டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்தன.

ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிகளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்திவிட்டு மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குப்பை மற்றும் கழிவுநீரைவிட்டு செல்வதாகவும், தனியார் நிறுவனங்களின் ரசாயனங்கள் கூவத்தில் கலப்பதால் மீன்கள் செத்துமிதப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம். நச்சு கலந்த நீரால் மீன்கள் இறந்ததா? என்பதை அறிய மீன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவுநீர் கொட்டப்படுகிறது. ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஆற்றுப்பகுதியை அதிகாரிகள் சரியாக பராமரிப்பது இல்லை. கண்காணிப்பதுமில்லை. ஏற்கனவே மழை காலத்திற்கு முன்பாகவே மழைநீர் செல்லும் ஆற்றுப்பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்தவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பை நிரம்பி தண்ணீர் செல்ல வழியின்றி அடைத்து கிடைக்கிறது எனவும் ெபாதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜாங்கீர் பாஷா, சுகாதாரத்துறை அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இறந்த மீன்களையும் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனர். மேலும் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது‌ இதனால் மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Koovam river ,Thiruvekadu ,Poontamalli ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம்...