×

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்: திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா. கடந்த 2020 டிசம்பர் மாதம் பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.

வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக உள்ளது. வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால், வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது. சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்: திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chitra ,Thiruvallur court ,Chennai ,Poontamalli ,Nasarathpet.… ,Tiruvallur court ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?