×

கோவை சரவணம்பட்டியில் மகளிர் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை: மகனின் நண்பர் என கூறி துணிகரம்

கோவை: கோவை கணபதி பாரதிநகரில் உள்ள அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் கலையரசன் மனைவி ஸ்ருதி(51). இவர் ஏர்போர்ட் சித்ரா அருகே மகளிர் விடுதி நடத்தி வருகிறார். சில நேரங்களில் அவர் அப்பார்ட்மென்டில் உள்ள வீட்டை பூட்டி சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு மகளிர் விடுதியில் தங்குவது வழக்கம். இதேபோல், நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு சித்ராவில் உள்ள தனது மகளிர் விடுதிக்கு சென்று தங்கினார்.

அப்போது அப்பார்ட்மென்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் செக்யூரிட்டியிடம் சென்று தான் ஸ்ருதியின் மகனின் நண்பன். எனது உடைகளில் சில அவரது வீட்டில் உள்ளன. அதனை எடுக்க வேண்டும் என கூறி சாவியை கேட்டுள்ளார். உடனே இதனை நம்பிய செக்யூரிட்டியும் அவரிடம் சாவியை கொடுத்தார். சிறிது நேரம் கழித்து செக்யூரிட்டி ஸ்ருதியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனின் நண்பர் என கூறி ஒருவர் வந்தார், அவர் கேட்டதின் பேரில் சாவியை கொடுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி உடனே கணபதியில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணவில்லை. இது குறித்து ஸ்ருதி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ரூ.20 லட்சம் கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ருதியின் மகனின் நண்பர் என கூறிய நபர் யார்? அவர் உண்மையிலேயே அவரது நண்பர்தானா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை சரவணம்பட்டியில் மகளிர் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை: மகனின் நண்பர் என கூறி துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Saravanambatti ,Gov. ,Govai ,Kalaiyarasan ,Shruti ,Bharatinagar ,Chitra ,Gov ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!