×

விசாகப்பட்டினத்தில் கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை: அதிகாரிகள் அதிர்ச்சி

அமராவதி: விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு பக்தர் ஒருவர் செலுத்திய காசோலையை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். பக்தர்களும் உண்டியலில் காணிக்கை செலுத்துவதும் வழக்கம்தான். இந்த உண்டியல் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோயில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த காசோலையில், 100 கோடி ரூபாய்க்கு கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உயரதிகாரிகளும் விரைந்து வந்து விசாரித்தனர். அதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என தெரியவந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராகலட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ.10 என்றும், பிறகு அதை அடித்து ரூ.100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, அதிகாரிகள், வங்கிக்கு சென்று அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை விசாரித்தனர். ஆனால் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காசோலையை காணிக்கையாக போட்டவரை கண்டுபிடித்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க கோயில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

The post விசாகப்பட்டினத்தில் கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை: அதிகாரிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Visakhapatinam ,Amaravathi ,Temple Piggy ,
× RELATED வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம்...