×

உயிர் உரங்கள் பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடியில் உயர் விளைச்சல்

*உள்ளிக்கோட்டையில் விழிப்புணர்வு

நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவதற்கான உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி உள்ளிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.இந்த செயல் விளக்கத்தில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட
ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி கலந்து கொண்டு உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஒரு கிலோ விதைக்கு 100 மிலி கலந்து விதை நேர்த்தி செய்யலாம் அல்லது ஒரு ஏக்கருக்கு 5 லிட்டர் மண் வழி இடலாம். பாஸ்போபேக்டீரியா ஒரு கிலோ விதைக்கு 100 மிலி கலந்து விதை நேர்த்தி செய்யலாம் அல்லது ஒரு ஏக்கருக்கு 5 லிட்டர் மண் வழி இடலாம்.

மேலும் நெற்பயிரை இயற்கை முறையில் நோய்களில் இருந்து பாதுகாக்க உயிர் எதிர்கொல்லியான பேசில்லஸ் சப்டிலிஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 மிலி கலந்து இலை வழி தெளிப்பு மூலம் பயன்படுத்தலாம்.இது பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாக செயல்பட்டு பயிர்களின் மகசூலை அதிகரிக்க வழிவகை செய்கிறது. இவற்றை பயன்படுத்துவதால் நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கும், மண்ணிலுள்ள மண்புழுக்களுக்கும் எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. இவற்றால் சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட 50 விவசாயிகளுக்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் உயிர் எதிர்கொல்லியான சூடோமோனாஸ் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர்கள் சுரேஷ், தினேஷ்குமார், புஷ்பராஜ் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் குகன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post உயிர் உரங்கள் பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் appeared first on Dinakaran.

Tags : Ullikottai Needamangalam ,Needamangalam Agricultural Science Center ,Trinti ,
× RELATED சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்