ராமநாதபுரம், ஆக.25: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 11.9.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எஸ்பி தங்கதுரை முன்னிலையில், கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் சமுதாய அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு விதிமுறைகளை பின்பற்றி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.
காவல்துறை வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம்பர பலகை வைத்துக் கொள்ளவும். வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு தேவையான முன் அனுமதி காவல்துறை மூலம் அனுமதி சீட்டு பெற்று வந்து செல்ல தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். மேலும் நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நினைவு நாள் அன்று அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் சென்று நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுச் செல்லவும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கோட்டாட்சியர் கோபு, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post செப்.11ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.