தோகைமலை, ஆக. 25: தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி கரிச்சிப்பட்டியில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு கடவூர் தாசில்தார் முனிராஜ் பரிந்துரை செய்துள்ளார். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பகுதி ஊராட்சி கரிச்சிப்பட்டி குடியிருப்பு பகுதி அருகே கடந்த வாரம் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது திடீர் பள்ளம் ஏற்பட்டது. பின்னர் பானை போன்ற வடிவில் சுமார் 20 அடிக்கும் மேல் குழி ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வருவாய்த்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து கடவூர் தாசில்தார் முனிராஜ், மேலப்பகுதி ஊராட்சி தலைவர் மாணிக்கம், மைலம்பட்டி ஆர்ஐ நெப்போலியன் ஆகியோர் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் சுமார் 2 யூனிட் அளவுக்கு எம்.சாண்ட் மண்ணை அந்த குழியில் கொட்டினர். ஆனால் அந்த குழி மேலும் உள்ளே சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய் துறையினர், இந்த பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது உள்ளதா என ஆய்வு செய்ய, மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். கரிச்சிப்பட்டியில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தரகம்பட்டி அருகே 20 அடியில் திடீர் பள்ளம் appeared first on Dinakaran.