×

டாஸ்மாக்கில் நிரந்தர விலை பட்டியலை வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளில் நிரந்தர விலைப்பட்டியல் வைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை எனக் குறைக்கவும், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்கக் ேகாரியும், மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கவும் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சிலர் மனு ெசய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், ‘‘பொதுநலன் கருதி மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். மது பாட்டில்களில் அடையாள வில்லை (லேபிள்), விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் முதலானவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும்.

மேலும், மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைக்கலாம்’’ என உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதால் சம்பந்தப்பட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் கமிஷனர் காரல்மார்க்ஸ் ஆஜராகி தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘மதுரை மாவட்டம் திருமங்கலம், செக்கானூரணி, வாடிப்பட்டி, குருவிக்காரன்சாலை, கே.கே.நகர், மாட்டுத்தாவணி மற்றும் பீபீகுளம் உள்பட பல்வேறு டாஸ்மாக் கடைகளுக்கு மனுதாரர் வக்கீலுடன் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் விபரம் ஒட்டப்பட்டிருந்தது’’ என கூறப்பட்டிருந்தது. டாஸ்மாக் தரப்பில், ‘‘கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 35 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் விலை விபர பட்டியல் நிரந்தரமாக இருக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

The post டாஸ்மாக்கில் நிரந்தர விலை பட்டியலை வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,iCord ,Madurai ,iCort Madurai ,Tasmac ,Tamil Nadu ,iCourt ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!