×

கஞ்சா காதலன் தீக்குளித்து இறந்ததால் ஏனாமில் காதலி தூக்குபோட்டு தற்கொலை

 

புதுச்சேரி, ஆக. 23: கஞ்சா போதைக்கு அடிமையான காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலியும் தூக்கு போட்டு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ளது புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் பகுதி. இங்குள்ள யூகேவி நகரை சேர்ந்தவர் மவுனிகா(22). இவரது பெற்றோர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். மவுனிகாவின் அக்கா, தங்கை ஆகிய 2 பேரும் திருமணமாகி மாமியார் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் மவுனிகா தனது தாய் மாமா திருமூர்த்தி வீட்டில் இருந்தபடி சோழங்கி ராயல் கல்லூரியில் நர்சிங் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் மவுனிகாவுக்கும், குரசம்பேட்டையை சேர்ந்த சின்னா(23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். சின்னாவுக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன் கஞ்சா புகைக்க அவரது அண்ணனிடம் ரூ.500 கேட்டுள்ளார். ஆனால் அவர் தரவில்லையாம். இதனால் மனவேதனை அடைந்த சின்னா, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர் காக்கிநாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் இறந்தார்.

காதலன் இறந்த தகவலறிந்த மவுனிகா மனவேதனை அடைந்தார். இதனால் கல்லூரிக்குகூட செல்லவில்லையாம். காதலன் சின்னா பயன்படுத்திய உடைகள், பொருட்களை தனது அறையில் வைத்து அடிக்கடி பார்த்து அழுதுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது காதலனை மறக்க முடியாத மவுனிகா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது மாமா திருமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா காதலன் தீக்குளித்து இறந்ததால் ஏனாமில் காதலி தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Enam ,Puducherry ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!