×

புதுவை மரப்பாலம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி, ஆக. 22: புதுவை மரப்பாலம் சந்திப்பில் கால்வாய் அமைக்கும் பணிக்காக 100 அடி ரோடு மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரி மரப்பாலம் அருகே கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதையொட்டி 100 அடி ரோட்டில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டன.

இதையடுத்து கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் புவன்கரே வீதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இசிஆர், விழுப்புரத்தில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் வாகனங்களும் காராமணிக்குப்பம் சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன. இதனால் நெல்லித்தோப்பு புவன்கரே சாலையில் நெருக்கடி அதிகமாகி உள்ளது. ரயில்வே கேட்டும் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை என்பதால் காலை மற்றும் மாலை நேரத்தில் மரப்பாலம், நைனார்மண்டபம் பகுதியில் இருந்து நகர பகுதிக்கு அதிகளவில் இருசக்கர வாகனங்கள் வந்தன. அப்போது மரப்பாலம், மூப்பனார் சிலை சந்திப்பு பகுதியில் சிக்னல் இயக்கப்படாத நிலையில் வாகனங்கள் தாறுமாறாக வந்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக கடலூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வேல்ராம்பேட் பகுதிக்கு செல்லும் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். நீண்ட நேரத்திற்குபின் போக்குவரத்து போலீசார் சம்பவ இடம் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு படிப்படியாக சகஜ நிலை திரும்பியது. இருப்பினும் வரும் 27ம்தேதிவரை அப்பகுதியில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக டிராபிக் போலீசாரை பணியில் ஈடுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதுவை மரப்பாலம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Puduvai Marapalam ,Puducherry ,Puduwai Marapalam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை