×

கறி அதிகம் வைக்காததால் ஆத்திரம் தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்

தஞ்சை: ஒரத்தநாடு அருகே அசைவ விருந்தில் கறி பரிமாறிய தந்தை தனக்கு அதிகம் வைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் அவரை மகன் கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆமலாப்பட்டு தெற்கு குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(60). விவசாயி. இவரின் தந்தை மரணம் அடைந்து, நேற்று 16வது நாள் கருமாதி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உறவினர்களுக்காக வீட்டில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதில் இளங்கோவனின் மகன் சிலம்பரசன்(25) சாப்பிடுவதற்காக பந்தியில் அமர்ந்தார். குடிபோதையில் இருந்த அவருக்கு அவரது தந்தை இளங்கோவன் பரிமாறினார். அப்போது கறி அதிகமாக வைக்கவில்லை என சிலம்பரசன், அவரது தந்தை இளங்கோவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைப்பார்த்த அருகிலிருந்த உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு மதுக்கடைக்கு சென்று மேலும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சிலம்பரசன், தந்தை இளங்கோவனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மிக கோபமடைந்த சிலம்பரசன், வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து தந்தை இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் முகம், உடல் உள்பட பல இடங்களில் படுகாயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த பாப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த இளங்கோவனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய சிலம்பரசனை தேடி வருகின்றனர். குடிபோதையில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கறி அதிகம் வைக்காததால் ஆத்திரம் தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன் appeared first on Dinakaran.

Tags : Rage ,TANJA ,Oratanadu ,
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...