×

மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது

*கார், பைக் பறிமுதல்

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கார், பைக், 6 சவரன் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆட்சிக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் தங்கச் செயின் மற்றும் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பைக்கில் கணவனோடு வந்த பெண்ணின் தாலிச் செயின் போன்றவற்றை அடுத்தடுத்த நாட்களில் மோட்டார் பைக்கில் வந்து மர்மநபர்கள் பறித்த சென்றனர். இது குறித்து புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் நேற்று மதியம் மரக்காணம் அருகே அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி வேகமாக வந்த புதிய காரை சந்தேகத்தின் பேரில் மறித்து விசாரணை நடத்தினர்.

காருக்கு பின்னால் விலை உயர்ந்த பைக்கில் வந்தவரையும் மடக்கினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அவர்கள் பெண்களிடமிருந்து நகைகளை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த தனுஷ் (19), யோகேஷ் (19), அப்துல்லா (21), யோகேஸ்வரன் (24), மேகநாதன் (19), அஜித்குமார் (21), சாந்தகுமார் (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். புதிய கார், விலை உயர்ந்த பைக், 6 சவரன் தங்க கட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Marakanam ,Marakkanam ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...