×

உடுமலை அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 20 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி பலி

*தொடர் சம்பவத்தால் விவசாயிகள் கவலை

உடுமலை : உடுமலை அருகே தோட்டத்து பட்டியில் புகுந்த தெருநாய்கள் 20 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றன.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி அய்யம்பாளையம் பிரிவில் பெரியசாமி (50) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பட்டி வைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பெரியசாமி தோட்டத்துக்கு சென்றபோது, பட்டியில் உள்ள ஆடுகள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. ஒரு கன்றுக்குட்டியும் குடல் வெளியே வந்த நிலையில் இறந்து கிடந்தது.

7 மாதம் முதல் 10 மாதம் வரையிலான 16 ஆடுகளும், 5 மாதம் முதல் 7 மாதம் வரையிலான 4 குட்டிகளும் என மொத்தம் 20 ஆடுகள் இறந்து கிடந்தன. தகவலின்பேரில், கால்நடைத்துறை அதிகாரிகள் சென்று விவசாய தோட்டத்தை பார்வையிட்டனர். தடயங்களை வைத்து பார்க்கும்போது, நாய்கள் கூட்டமாக வந்து வேட்டையாடி இருப்பது தெரிய வந்துள்ளது.

சின்னவீரம்பட்டி, தாந்தோணி பகுதிகளில் தொடர்ச்சியாக நாய்கள் கூட்டம் ஆடுகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை கண்காணித்து நாய்கள் வருவதை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். நேற்றைய சம்பவத்தில் விவசாயி பெரியசாமிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததால் மிகுந்த வேதனை அடைந்தார். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post உடுமலை அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 20 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு