×

நீட் தேர்வு மூலம் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர் கட்சி தீர்மானம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இளைஞர்களின் மருத்துவ கனவை சிதைத்து தற்கொலைக்கு தூண்டும் தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் தொழிலாளர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் இளைஞர் அணி மாநாடு நடந்தது. இதற்கு இளைஞரணி மாவட்டச் செயலாளர் எஸ்.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அல்போன்சா பாஸ்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்றனர். மாநாட்டை மாநில இளைஞரணி தலைவர் வினோத்குமார் தொடங்கி வைத்தார். கட்சி தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார்.

இதில் மாநில பொதுச் செயலாளர்கள் என்.சுந்தரராஜ், ஜெகதீசன், ஜெகமுருகன், வி.சுப்பராயலு, பொருளாளர் ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிடும் நோக்கில் அவர்களின் திறனை மேம்படுத்திட தனித்துறையை ஏற்படுத்தி, ஒரே ஆண்டில் 12 லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சாதனை படைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தனிக்கவனம் செலுத்தி, பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, பல லட்சம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் மட்டும் இதுவரை 1,368 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனையாகும். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நீட் தேர்வு மூலம் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர் கட்சி தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,Governor ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து