×

ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் ம.பியில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்: வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை; அர்விந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

சட்னா: மத்தியபிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆம் ஆத்மி மத்தியபிரதேசத்திலும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தின் சட்னாவில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கூட்டத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது, “மத்தியபிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச கல்வியை வழங்க தரமான பள்ளிகளை உருவாக்கும். மருத்துவமனைகளில் ரூ.20 லட்சம் செலவில் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகளுடன் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை தரப்படும்.

300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், 24 மணி நேரமும் தடையற்ற மின்விநியோகம் மற்றும் நவம்பர் 30ம் தேதி வரை நிலுவையில் உள்ள மின்கட்டணங்கள் ரத்து செய்யப்படும். மத்தியபிரதேசத்தில் ஊழலை வேரறுக்கும். சில கட்சிகள் தேர்தலின்போது வௌியிடும் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றன. அதை அந்த கட்சி தலைவர்களும் மறந்து விடுகின்றனர். ஆனால் ஆம் ஆத்மி வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை பார்த்தால் இந்த உண்மை உங்களுக்கு புரியும்” இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் ம.பியில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்: வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை; அர்விந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : PB ,Arvindh Kejriwal ,Aam Aadmi ,Madhya Pradesh ,Arvind Kejriwal ,
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...