×

கணவனுடன் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது போலீஸ் வாகன சோதனையில் சிக்கினர் தண்டராம்பட்டு அருகே வீட்டின் வெளியே

தண்டராம்பட்டு, ஆக.20: தண்டராம்பட்டு அருகே வீட்டின் வெளியே கணவனுடன் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் போலீசாரின் வாகன சோதனையின்போது சிக்கினர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை(44), ஏழுமலை. இவரது மனைவி கலைவாணி(39). இருவரும் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் கலைவாணியை தாக்கி விட்டு கழுத்தில் இருந்த தங்க செயின் உட்பட 7 சவரன் நகையை அறுத்து சென்றனர்.

பின்னர், கலைவாணியின் அலறல் சத்தம் கேட்ட அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கலைவாணியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் தண்டராம்பட்டு தனியார் கல்லூரி எதிரே வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்த இரு வாலிபர்களை நிறுத்திய போது நிற்காமல் வேகமாக சென்றனர். அதனை தொடர்ந்து, போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மலமஞ்சனூர் புதூர் கிராமத்தை சேர்ந்த ராமு(29), விக்னேஷ்(31) என தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் விநாயகபுரம் பகுதியில் வீட்டில் உறங்கிய பெண்ணிடம் செயின் பறித்து சென்றது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 5 சவரன் செயினை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கணவனுடன் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது போலீஸ் வாகன சோதனையில் சிக்கினர் தண்டராம்பட்டு அருகே வீட்டின் வெளியே appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Thandarampatu ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...