×

மாணவிகளை அடித்த அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால்

ேவலூர், ஆக.18: அணைக்கட்டு அருகே வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் மாணவிகளை அடித்த அரசுப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்து முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் தீபலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கம்மவார்பாளையத்தை சேர்ந்த 4 மாணவிகளின் தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அந்த பகுதி வீக்கம் அடைந்தது.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவிகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் அவர்களை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், ஆசிரியை தீபலட்சுமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, இலவம்பாடி அரசுப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர்கள், காயமடைந்த 4 மாணவிகள் மற்றும் ஆசிரியை தீபலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். முதற்கட்டமாக ஆசிரியையிடம் இதுபற்றி விளக்கம் பெறப்பட்டது. பின்னர் மாணவர்கள், ஆசிரியை தீபலட்சுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆசிரியை தீபலட்சுமியை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டார்.

The post மாணவிகளை அடித்த அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் appeared first on Dinakaran.

Tags : Yevalur ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!