×

மதுரை, ஒத்தக்கடையில் உள்ள கோயில் நிலத்தில் பள்ளி மைதானம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை, ஆக. 18: மதுரை, ஒத்தக்கடையில் உள்ள கோயில் நிலத்தில் பள்ளி மைதானம் அமைக்க உத்தரவிடக்கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த சாந்தமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் கடந்த 75 ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் இல்லாமல் செயல்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டியில் பங்ேகற்க பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு தேவையான நிலம் பள்ளிகளுக்கு மிக அருகிலேயே உள்ளது.

இதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோதண்டராமர் ேகாயிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் மைதானம் அமைத்தால் மாணவர்கள் பெரிதும் பலனடைவர். எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் கோயிலுக்கு சொந்தமாக சுமார் ஆறரை ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், ஐகோர்ட் கிளைக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதி அமைப்பதற்காக சுமார் ஐந்தரை ஏக்கர் நிலம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை வழங்குவதற்கான அரசு நடைமுறைகள் நடந்து வருகிறது. மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் கோயிலுக்கு வருமானம் ஏற்படுத்தும் வகையில் வணிக வளாகம் அமையவுள்ளது என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post மதுரை, ஒத்தக்கடையில் உள்ள கோயில் நிலத்தில் பள்ளி மைதானம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Othakadai, Madurai ,Madurai ,Othakkada, Madurai ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...