ஊட்டி, ஆக.18: இபிஎப் 95 ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தினர் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஊட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி, கலெக்டர் அலுவலகம் முன்பு இபிஎப் 95 ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசு, அனைத்து இபிஎப் 95 ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் மற்றும் பஞ்சப்படி வழங்க வேண்டும். இபிஎப் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
ஆர்சி குப்தா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 2017ம் ஆண்டு இபிஎப்ஓ வெளியிட்ட சான்று அறிக்கையின் அடிப்படையில் உயர் ஓய்வூதியத்தை உடனடியாக அமுல்பத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதிவிராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க கேட்டு இபிஎப் 95 ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.