×

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ1000 கோடி மதிப்பு நிலங்களை மீட்க வேண்டும்: அறநிலையத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகத்தில் பரம்பரை அறங்காவலர்கள் ஏராளமான முறைகேடுகள் செய்து, சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை வண்டலூரைச் சேர்ந்த தேசிய இந்து கோயில் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கே.ஸ்ரீராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 415 கிரவுண்ட் நிலங்கள் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு நன்கொடையாளர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 300 கிரவுண்ட் நிலங்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துகளுக்கு 2022 செப்டம்பர் மாதம் நிலவரப்படி ரூ19 கோடிேய 57 லட்சம் வாடகை பாக்கி உள்ளதாகவும் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களைக் கண்டறிந்து மீட்க தாசில்தார், நில அளவைத்துறை உதவி இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

கோயில் நிலங்களை மோசடியாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.டி.ெபருமாள், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகினர். வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிடும்போது, இந்த கோயிலுக்கு சொந்தமான 89 இடங்களை காணவில்லை. அவை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

The post நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ1000 கோடி மதிப்பு நிலங்களை மீட்க வேண்டும்: அறநிலையத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nungambakkam ,Agatheeswarar Temple ,ICourt ,Chennai ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர்...