திருமலை: வன விலங்குகளிடம் இருந்து தற்காப்புக்காக திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடிகளை சோதனை முறையில் தேவஸ்தானம் வழங்கியது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 6 வயது லட்ஷிதா என்ற சிறுமி மலைப்பாதையில் கடந்த 11ம்தேதி தனது பெற்றோருடன் சென்ற போது சிறுத்தை தாக்கியதில் இறந்தார். இதனையடுத்து கூண்டு வைக்கப்பட்டு அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டது.
மேலும் சிறுத்தை பிடிபட்ட அன்றைய தினமே அப்பகுதியில் மற்றொரு சிறுத்தை சுற்றி வந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் இந்நிலையில் நடைபாதையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுடன் அனுமதிக்கப்படுகின்றனர். சிறுவர்கள் இல்லாத பெரியவர்கள் மட்டும் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பக்தர்களை உரிய பாதுகாப்பான முறையில் மலைக்கு செல்ல தேவஸ்தானம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மேலும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், நடைபாதையில் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களை வனவிலங்குகள் தாக்க வந்தால் தற்காத்துக் கொள்வதற்காக ‘கைத்தடி வழங்குவது எனவும், அதனை உடனே அமல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சோதனை அடிப்படையில் கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கைத்தடிகளை திருமலைக்கு சென்றதும் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் பெற்றுக்கொள்வார்கள். பின்னர் மீண்டும் மலை அடிவாரத்திற்கு கைத்தடிகள் கொண்டு வரப்பட்டு சுழற்சி முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
The post வன விலங்குகளிடம் இருந்து தற்காப்புக்காக திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி: சோதனை முறையில் தேவஸ்தானம் வழங்கியது appeared first on Dinakaran.