- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- குடிநீர்
- தாமோ.அன்பரசன்
- காஞ்சிபுரம் வடக்கு
- மாவட்டம்
- திமுக
- Mambakkam
- சட்டசபை
- துரைசாமி
திருப்போரூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பேசியதாவது: மக்களின் பேராதரவோடு நடைபெற்று கொண்டிருக்கிற திமுக ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதற்காக பாஜ மற்றும் மதவாத அமைப்புகள் சாதி, மத மோதல்களை தூண்டி விடுகின்றன. திமுகவினர் எதைப் பேசினாலும், செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில், இந்த ஆட்சிக்கு எதிராக பதிவிடும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.
ஆகவே, திமுகவினர் தங்களின் பொறுப்பை உணர்ந்து கண்ணியத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். வருகிற 20ம்தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவிலும், 21ம்தேதி நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட தொடக்க விழாவிலும் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இந்த 2 தினங்களிலும் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, அன்புச்செழியன், அன்புச்செல்வன், ஆதிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், துணை தலைவர் காயத்ரி அன்புச்செழியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான இதயவர்மன் நன்றி கூறினார்.
The post கடல்நீரை குடிநீராக்கும் திட்ட விழாவுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு: தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.