×

புதுவண்ணாரப்பேட்டை விடுதியில் நள்ளிரவு மது விருந்தில் தகராறு: பெண்ணுக்கு பீர் பாட்டில் குத்து: தப்பிய 3 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: விடுதியில் மதுவிருந்து வைத்தபோது ஏற்பட்ட தகராறில் பெண்ணை பீர் பாட்டிலால் குத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை, நேற்று அதிகாலை செல்போனில் தொடர்புகொண்ட இளம்பெண் ஒருவர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலை உடைத்து என்னை சிலர் குத்திவிட்டனர். உடனே விரைந்து வாருங்கள், என தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த விடுதியில் சோதனையிட்டபோது, இளம்பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டனை சேர்ந்த முத்துக்குமரன் (43) என்பவர், நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு புதுவண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துள்ளார். அங்கு, முத்துக்குமரன், காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த சவுமியா (35) மற்றும் தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலு, சங்கீதா, ஹரி, வசந்தி ஆகிய 6 பேர் ஒன்றாக தங்கி, மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முத்துக்குமரன், பாலு, சங்கீதா ஆகியோர் பீர் பாட்டிலை உடைத்து சவுமியாவின் கையில் குத்தியுள்ளனர். இதில், சவுமியா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதையடுத்து மற்ற 5 பேரும் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகள் மூலம் தப்பிய 3 பேரையும் தேடி வருகின்றனர். இவர்கள் ஒன்றாக மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தனரா, இவர்களுக்குள் என்ன தொடர்பு, எதற்காக சண்டை போட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுவண்ணாரப்பேட்டை விடுதியில் நள்ளிரவு மது விருந்தில் தகராறு: பெண்ணுக்கு பீர் பாட்டில் குத்து: தப்பிய 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Puduvannarappet ,Thandaiyarpet ,Chennai Police ,Hotel ,
× RELATED பிறந்தநாள் பார்ட்டியில் ரவுடிகளுக்குள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு