ஆந்திரா: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த 2 ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் வந்த இரண்டு விரைவு ரயிகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் S2,S4,S5,S6,S7,S8 ஆகிய பெட்டிகளிலும் செகந்திராபாத்திலிருந்து தாம்பரம் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் S1,S2 ஆகிய பெட்டிகளிலும் ஆந்திர மாநிலம் சிங்கராயகோண்டா மற்றும் கவாலி இடையே ரயில்கள் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவில் 12.20 முதல் 12.50 மணிக்குள்ளாக கொள்ளையர்கள் இரண்டு ரயில்களிலும் புகுந்து 8 ரயில்பெட்டிகளில் பயணிகளிடம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நகைகளை பறிகொடுத்த பயணிகள் ரயில்வே போலீசிடம் தகவல் அளித்தனர். இது குறித்த தகவல் அறிந்து உடனடியாக கவாலி ரயில்வே போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த ரயில்பெட்டிகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து ரயில் பெட்டிகளிலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கவாலி ரயில்வே காவல் நிலையத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு பின்னரே கொள்ளை போன தங்கநகைகள் மதிப்பு மற்றும் எத்தனை பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்கள் தெரியவரும் என்று ரயில்வே காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து2 ரயில்களில் 8 ரயில்பெட்டிகளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள கொள்ளை சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
The post ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த 2 ரயில்களில் பயணிகளிடம் கொள்ளை..!! appeared first on Dinakaran.