×

திருப்பதி அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது

திருமலை: திருப்பதி அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொவூரு மண்டலம்கோத்திரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லட்ஷிதா(6). இவர்கள் 3 பேரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலைப்பாதை வழியாக சென்றனர். இரவு 7.30 மணியளவில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி எதிரே சென்றபோது லட்ஷிதா திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்ஷிதாவை இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். மறுநாள் காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியை சேர்ந்த கோண்டா மற்றும் ஷிரிஷா தம்பதியின் மகன் கவுசிக்(4) ஆகியோர் நடைபாதை வழியாக பாதயாத்திரை சென்றபோது கவுசிக்கை சிறுத்தை கவ்வி சென்றது. பொதுமக்கள் விரட்டி சென்றதால் சிறுவனை, சிறுத்தை விட்டு சென்றது. இதையடுத்து கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்பட்டது. ஆனால் அது குட்டி சிறுத்தை என்பதால், அதன் தாய் சிறுத்தை நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது சிறுமியை அந்த தாய் சிறுத்தை கவ்விச்சென்று கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.இந்த நிலையில், லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே உள்ள வனப்பகுதியில் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருப்பதி அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Tirupati Alipiri ,Tirumalai ,AP State Nellore ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...