×

வானூர் அருகே பயங்கரம் வாலிபர் சரமாரி குத்தி படுகொலை

 

வானூர், ஆக. 14: ஆரோவில் அருகே மாமியாரிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட மருமகனை கத்தியால் குத்தி படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, குருசுகுப்பம், சின்னதம்பித் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் வெரோனிக் என்கிற முகுந்தன் (25). வீட்டில் நாய்களை வளர்த்து விற்பனை செய்துவந்தார். இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு லாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகள் ரம்யாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரம்யாவை குருசுகுப்பத்தில் வசிக்கும் தேவா (32) என்பவரும் காதலித்த நிலையில் அது தோல்வியில் முடிந்ததால் முகுந்தனுடன் பிரச்னை ஏற்பட்டு இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ரம்யாவின் தாய் கோமதிக்கு, தேவா ஏற்கனவே பழக்கமானவர் என்பதால், தொடர்ந்து அவருடன் பேசி வந்ததாக தெரிகிறது. கணவரை 12 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்த கோமதி ஓராண்டுக்கு முன்பு வேலை நிமித்தம் காரணமாக கலைவாணர் நகரில் தனி வீட்டில் வசித்து வந்தார். இதனால் ரம்யாவும் தனது தாயை பராமரிக்க, கணவர் முகுந்தனுடன் 6 மாதத்துக்கு முன்பு கலைவாணர் நகரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவ்விவகாரம் தேவாவுக்கு தெரியவரவே, அவ்வப்போது குடிபோதையில் கோமதி வீட்டிற்கு வந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்படவே கோமதி, தனது மகளிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கோமதி வீட்டுக்கு வந்த அவரது மருமகன் முகுந்தன், தேவாவை தட்டிக் கேட்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவா தான் கையில் வைத்திருந்த கத்தியால் முகுந்தனின் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரி குத்தியதோடு, சுவர் மீது பிடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த அவரை கோமதியும், சக உறவினர்களும் மீட்டு அருகிலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக கோமதி, அவரது மகள் ரம்யா உள்பட உறவினர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், புகாரை பெற்று தேவா மீது கொலை வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வானூர் அருகே பயங்கரம் வாலிபர் சரமாரி குத்தி படுகொலை appeared first on Dinakaran.

Tags : Vanur ,Auroville ,Dinakaran ,
× RELATED வரம் தரும் அம்பிகையர்