×

‘குழந்தைங்க தான் இல்லையே…நகை எதுக்கு உங்களுக்கு…? ’அரசு டாக்டர் வீட்டில் 100 சவரன் கொள்ளை: கவனித்து கொள்ள வந்த உறவினர் கைவரிசை

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகரில், அரசு டாக்டர் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை உறவினர் ஒருவர் கொள்ளையடித்து தப்பி சென்றார். சென்னை அடையாறு இந்திரா நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (76). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி ஞானமணி(72). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. டாக்டர் கனகராஜ் முதுமை காரணமாக, சில மாதங்களாக தீவிர சிகிச்ைச பெற்று வந்துள்ளதாக தெரிகிறது. வயதின் காரணமாக ஞானமணி தனது கணவரை சரியாக கவனிக்க முடியவில்லை.

இதனால், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்களது உறவினர் கனகசண்முகத்தை மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இந்தநிலையில், கனகராஜ் கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டார். இதையடுத்து, கனகசண்முகம் ஞானமணியிடம் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக, கூறிவிட்டு, சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், ஞானமணி கடந்த ஜூலை 13ம் தேதி பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை சரி பார்த்துள்ளார். அப்போது, செயின், மோதிரம், வளையல் உள்பட 100 சவரன் மற்றும் ரூ.3 லட்சம் மாயமானது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கனகசண்முகம் மீது சந்தேகமடைந்த ஞானமணி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதுபற்றி கேட்டபோது அவர், ‘‘நகைகள், பணத்தை தான்தான் எடுத்தேன்.

உங்களுக்கு தான் குழந்தைகள் இல்லையே, எனவே நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நகை, பணம் என்னிடம் இருக்கட்டும். இதுபற்றி யாரிடமாவது கூறினாலோ. போலீசில் புகார் கொடுத்தாலோ உங்களை கொலைசெய்துவிடுவேன்.’’ என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஞானமணி, அடையாறு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையறிந்த கனகசண்முகம் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானார். புகாரின்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரை கவனித்து கொள்ள வந்தவர், கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘குழந்தைங்க தான் இல்லையே…நகை எதுக்கு உங்களுக்கு…? ’அரசு டாக்டர் வீட்டில் 100 சவரன் கொள்ளை: கவனித்து கொள்ள வந்த உறவினர் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Government Doctor's House ,Chennai ,Indira Nagar, ,Adyar, Chennai ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு