மான்ட்ரியல்: கனடாவில் நடக்கும் மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் மோதிய கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா மூன்றரை மணி நேரம் போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். முதல் செட்டில் 5-7 என்ற கணக்கில் தோற்று பின்தங்கிய ரைபாகினா, 2வது செட்டில் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அந்த செட்டை 7-6 (10-8) என கைப்பற்றிய ரைபாகினா 5-7, 7-5, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் 3 மணி, 27 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (22 வயது, போலந்து) 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸை (அமெரிக்கா) வீழ்த்தினார். சக அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் உடன் காலிறுதியில் மோதிய ஜெஸ்ஸிகா பெகுலா 6-2, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். அல்கராஸ் அதிர்ச்சி: கனடாவின் டொரான்டோ நகரில் நடக்கும் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டாமி பாலிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலி வீரர் யானிக் சின்னர், ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
The post மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் மூன்றரை மணி நேரம் போராடி வென்றார் ரைபாகினா appeared first on Dinakaran.