சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள ‘இந்திய’ என்ற பெயரை ‘பாரதீய’ என்று மாற்ற முனைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது. ஒன்றிய பாஜ அரசின் இந்நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
The post ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம் சட்டங்களின் பெயரை இந்தி சமஸ்கிருதத்தில் மாற்றுவதா? appeared first on Dinakaran.