![]()
மியான்மர்: மியான்மரில் கொட்டி தீர்க்கும் பருவமழை காரணமாக 5 பேர் இறந்தனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மரில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் மழை கொட்டி தீர்ப்பது வழக்கமானதுதான். ஆனால், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு பாகோ மற்றும் மத்திய மாக்வே பகுதிகளிலும், மேற்கு மாநிலமான ராக்கைன் பகுதியிலும் உள்ள சில நகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். வெள்ள அதிகரிப்பால் மீட்பு படையினர், வீடுகளில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். 2 மாடி கொண்ட கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மடங்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.
கடந்த 7, 8 ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார். சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இந்த மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட பிற அத்தியாவசிய உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
The post மியான்மரில் கொட்டி தீர்க்கும் கனமழை: 5 பேர் பலி; 60 ஆயிரம் பேர் வெளியேற்றம் appeared first on Dinakaran.
