×

நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அரசிற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, ‘‘இந்தியா’’ அமைப்புக்கு கிடைத்த வெற்றி என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். குன்றத்தூர் அடுத்த பெரியபணிச்சேரி பிரதான சாலையில் கலைஞரின் வெண்கல உருவ சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் தொடக்க விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த விழாவிற்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கலைஞரின் வெண்கல உருவ சிலை மற்றும் புதிய படிப்பகத்தை திறந்து வைத்து பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகால பாஜ ஆட்சியில் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் அதானி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார்.

தற்போது இந்தியாவில் அதானி விமான நிலையம், அதானி ரயில் நிலையம், அதானி ஹார்பர் ஆகியவை வந்துள்ளது. பாஜ அரசிற்கு நாடாளுமன்ற தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டணியால் இந்தியா என்ற வலுவான அமைப்பு உருவாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை தெளிவாக முடிவெடுத்து சிந்தித்து நாம் செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன் முன்னிலை வகுத்தனர்.

குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம் வரவேற்புரை வழங்கினார். திமுக பொருளாளரும் பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மணி, சிக்கராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வைதீஸ்வரன், குன்றத்தூர் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபு நன்றி கூறினர். நிகழ்ச்சியில் குன்றத்தூர், போரூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அரசிற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Baja Government ,Minister ,Udhayanidi Stalin ,Chennai ,Supreme Court ,Raqul Gandhi ,India ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு...