×

தொழிலாளர்கள் பிரச்னை விவகாரம் மத்தியஸ்தர் நியமனம் குறித்து என்.எல்.சி தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் குறித்து ஒன்றிய அரசும், என்.எல்.சி.யும் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி.யில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, என்.எல்.சி நிறுவனத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து முடிவெடுத்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது ஒரு தொடர் பிரச்னையாக உள்ளதால், என்.எல்.சி. நிர்வாகத்தின் நலனையும் பாதுகாக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்ட பின் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்று என்.எல்.சி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு என்.எல்.சி. தரப்பில் 10, 15 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, இதுகுறித்த விவரங்களை போலீசுக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். தொழிலாளர் பிரச்னை தொடர்பாக இருதரப்பும் ஒப்புக்கொண்டால்தான் மத்தியஸ்தரை நியமிக்க முடியும் என்றார். அதற்கு, ஒப்பந்த பணியாளர்களாக உள்ள அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமானால் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டி வரும். அது இயலாத காரியம் என்று என்.எல்.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நெய்வேலியில் நிலக்கரி தீர்ந்து விட்டால் மக்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பி விடுவர்.

நீதிமன்றம் என்.எல்.சி.க்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான். நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி.யை கைவிட முடியாது. 7 கோடி பேருக்கு ஒரு லட்சம் போலீசார் தான் இருக்கின்றனர். அத்தனை பேரையும் என்.எல்.சி.க்கு அனுப்ப முடியாது. மத்தியஸ்தர் நியமிக்க தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அரசும், என்.எல்.சி.யும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மத்தியஸ்தர் நியமனம் தொடர்பாக என்.எல்.சி.க்கு ஆகஸ்ட் 22 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

The post தொழிலாளர்கள் பிரச்னை விவகாரம் மத்தியஸ்தர் நியமனம் குறித்து என்.எல்.சி தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : NLC ,High Court ,Chennai ,N.L.C. ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி...