×

தஞ்சை அருகே போலீஸ் விரட்டியதால் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய 2 திருடர்கள்: பொது மக்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர்

திருவெறும்பூர்: தஞ்சை மாவட்டம் கல்லணை பகுதியில் தோகூர் போலீசார் கடந்த 5ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சை பகுதியில் இருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்களை மறித்தனர். அவர்கள் பைக்கை போட்டு விட்டு, கொள்ளிடம் ஆற்றில் குதித்து தப்பி சென்றனர். இந்நிலையில் அன்றிரவு தோகூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எடுக்க வந்த அவர்களை போலீசார் விரட்டினர். போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியவர்கள் கல்லணை கரிகால சோழன் யானை சிலை அருகே காவிரி ஆற்றில் குதித்தனர்.

ஆழம் அதிகமாக இருந்ததாலும், மறு கரைக்கு செல்ல தூரம் அதிகமாக இருந்ததாலும் நீச்சல் அடிக்க முடியவில்லை. சுமார் 15 நிமிடம் வரை நீச்சல் அடித்து சமாளித்தனர். பின்னர் நீந்த முடியாமல் கூச்சலிட தொடங்கினர். இதை பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்டு, தோகூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் ஆரோக்கிய செல்வகுமார் (20), காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த அப்துல்லா மகன் முகமதுசெலார்ஷா (19) என்பதும், கும்பகோணம் பகுதியில் இருந்து பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரி கேஷியர் மணிகண்டனிடம் ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்ற வழக்கில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இருவரையும் தோகூர் போலீசாரிடம் இருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

The post தஞ்சை அருகே போலீஸ் விரட்டியதால் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய 2 திருடர்கள்: பொது மக்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thiruverumpur ,Togur ,Kallani ,Tanjore district ,Tanjore ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...