×

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி மில் அதிபர் உள்பட 15 பேரிடம் ரூ.5.26 கோடி நூதன மோசடி: ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கைது

சேலம்: சேலம் அருகே, ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி சேகோ மில் அதிபர் உள்பட 15 பேரிடம் ரூ.5.26 கோடி மோசடி செய்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் (45). கிழங்கு மில் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவருக்கும் தம்மம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சாந்தகுமாருக்கும் (47) பழக்கம் ஏற்பட்டது. இவர் உலிபுரத்தில் வசித்து வருகிறார். ஷேர்மார்க்கெட் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தேவராஜனிடம் சாந்தகுமார் கூறி வந்தார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நான் பொறுப்பு என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், 2021ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை பல தவணைகளில் ரூ.65 லட்சத்து 78ஆயிரத்து 499 ரூபாயை சாந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஷேர் மார்க்கெட் தொழில் தொடர்பாக மும்பைக்கு பயிற்சிக்காக செல்வதாக கூறி ரூ.1 லட்சத்தை தேவராஜனிடம் வாங்கி சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. அதிர்ச்சியடைந்த தேவராஜன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். தொடர் விசாரணையில் 15 பேரிடம் சாந்தகுமார், 5 கோடியே 26 லட்சத்து 70ஆயிரத்து 899 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. வங்கி மூலமாகவும், நேரடியாகவும் அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.

இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, நேற்று சாந்தகுமாரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

The post ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி மில் அதிபர் உள்பட 15 பேரிடம் ரூ.5.26 கோடி நூதன மோசடி: ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : mill ,Xerox ,Salem ,Sego Mill ,CEO ,
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபருக்கு வலை