![]()
புதுடெல்லி: டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றம் ஜனநாயக படுகொலை என ஆம் ஆத்மி கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அரசு உயரதிகாரிகளை பணி அமர்த்துவது, இடமாற்றம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு டெல்லி சேவைகள் மசோதாவை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறும்போது, “ இந்த மசோதாவை நிறைவேற்றியது டெல்லி மக்களை அவமதிக்கும் செயல்.
இது ஒரு ஜனநாயக படுகொலை. டெல்லி மக்களும், சரித்திரமும் பாஜவை மன்னிக்காது, பாஜ அரசுக்கு மக்களவை தேர்தலில் டெல்லி மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்” என்று தெரிவித்தார். ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறியதாவது, “மோடிஜியின் டிஜிட்டல் இந்தியாவில் மாநிலங்களவையில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது. மசோதா மீது சீட்டு மூலம் வாக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை எண்ணுவதற்கு முகவர் யாருமில்லை. யாருக்கு யார் வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை. நாடாளுமன்றத்துக்குள் ஊழல்கள் நடக்கின்றன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
The post டெல்லி சேவைகள் மசோதா ஜனநாயக படுகொலை: ஆம் ஆத்மி கடும் கண்டனம் appeared first on Dinakaran.
