சென்னை: குடிநீருக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரில் இந்தாண்டு குறைவாக தண்ணீரே வழங்கியுள்ளதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையில் அதன் காரணமாக அணைகளில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும் 12டிஎம்சி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். நடப்பாண்டு நீர் வழங்கும் பருவத்தில் நேற்றுவரை 1.03டிஎம்சி நீரை மட்டும் ஆந்திரஅரசு விடுத்துள்ளது. ஊத்துக்கோட்டை, ஜீரோ பாயிண்ட் எல்லைக்கு நேற்று வினாடிக்கு 39.5 கன அடி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. கண்டலேறு அணையிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மழை இல்லாத காரணத்தால், ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டங்கள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டு நீர் வழங்கும் காலத்தில், 8 டி.எம்.சி., நீரை முறைப்படி திறக்க கேட்டு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், ஆந்திர மாநில நீர்வளத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
The post குடிநீருக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் appeared first on Dinakaran.