×

வெற்றி பெறும் வரை ஓயாதே! விரைந்து செயல்படு!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமுக்கு நாற்பது வயது தொடங்கிய சமயத்தில் இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராக விளங்கிய பேராசிரியர் சதீஷ்தவான், அவருக்கு ஒரு பணியைக் கொடுத்தார். அது ‘‘எஸ்.எல்.வி புராஜெக்ட்” இந்தியாவில் தயாரிக்க இருந்த செயற்கைக்கோள். இந்த திட்டப்பணிக்கு திட்ட இயக்குநராக கலாம் நியமிக்கப்பட்டார்.டாக்டர் கலாமுக்கு மனதிலே ஒரு அச்சம். தன்னை விட வயதில் முதிர்ந்த பல விஞ்ஞானிகள் இருந்தபோதும் தன்னிடம் இப்பணி தரப்பட்டுள்ளதே என்று ஒரு தயக்கம். டாக்டர் கலாமின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட தவான், ‘‘கலாம்,உங்களுக்குப் பிரச்னையே வரக்கூடாது என்றால்,நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் வராது” என்று கூறினார்.அப்துல் கலாம் இதைப் புரிந்து கொண்டார். தனது தயக்கத்தையும் அச்சத்தையும் விட்டுவிட்டு உடனே அயராது உழைத்தார்.தேசத்துக்குப் பெருமை தந்த எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை செலுத்தி சாதனையாக்கி காட்டினார்.

முடியாது என்று விலகி இருந்தால் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்க முடியுமா? சரியான முறைபடுத்தப்பட்ட உழைப்பு இருக்குமானால் எதுவும் சாத்தியம் தான்.கலாம் அவர்களிடம் தன்னால் முடியும் என்ற சரியான, முறைபடுத்தப்பட்ட உழைப்பு இருந்ததால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. இத்தகைய முடியும் என்ற ஊக்கம் சிறுவயதிலேயே கூட ஒருவரைச் சாதனையாளர் ஆக்கலாம். அப்படி சாதனைக்கு வயதே இல்லை என்று நிரூபித்தவர் மங்களூருவைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்த முகம்மது சுஹைல்.சிறுவயதிலேயே நூல்களைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நூல்களைப் படித்து கற்றுக்கொண்டு எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார்.

தனது 14 வயதில்,நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் டைல்ஸ் தகட்டை உருவாக்கினார். மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் இந்த டைல்ஸ்களை பதித்து, அதன் மூலம் எளிதாக மின்சாரம் தயாரிக்கலாம் என்ற கண்டுபிடிப்பை முதன்முதலாக நிகழ்த்தினார். அந்தக் கண்டுபிடிப்பிற்கு 50க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன. இருந்தபோதும் இந்த சமூகத்திற்கான ஒரு சிறந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை இளம் வயதிலேயே தீர்மானித்தார் முகமது சுஹைல்.உயிரியல் பேராசிரியர் ஒருவர், கண்டுபிடிப்புகள் எப்போதும் எளிய மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதை எப்படிக் கிடைக்க செய்வது என்பது பற்றி ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.
அதில் குறைந்த செலவில் மைக்ரோஸ்கோப்பை உருவாக்கி அதன் மூலமாக எளிமையாக மலேரியாவைக் கண்டறியலாம் என்பதைக் குறிப்பிட்டு இருந்தார். தனது நண்பர் மூலம் இதை அறிந்த சுஹைல், இதே போன்ற கண்டுபிடிப்பை உருவாக்க திட்டமிட்டார். அந்த கண்டுபிடிப்பு எளிய மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணமும் சுஹை லின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

உடனே இணையத்தில் இந்தியாவின் முக்கிய பிரச்னைகளை பற்றி தேடினார். அதில் முதன்மையானதாக ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததை அறிந்தார். இதற்குத் தீர்வு கண்டறிவதில் நிறைய சவால்கள் இருந்தன. இருந்தபோதும் தனது கண்டுபிடிப்பின் மூலமாக நமது நாட்டின் முக்கிய பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று முடிவு செய்தார் முகமது சுஹைல்.பல முயற்சிகளில் ஈடுபட்டபோதும் சரியான வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டதுதான் 2 ரூபாய் பேப்பர் கருவி. இதை இரண்டே நிமிடங்களில் தயாரித்து விடலாம். எச்சிலை அந்த பேப்பரில் வைத்தால் போதும் நிறமாற்றம் மூலம் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்துவிடலாம். எவ்வளவு ஊட்டச்சத்து குறைபாடு என்பதை கண்டறிய ‘‘மொபைல் ஆப்” ஒன்றையும் உருவாக்கி அதை வெற்றிகரமாகக் கர்நாடகா மாநிலத்தில் உள்ள எனேபோயா பல்கலைக்கழக மருத்துவமனையில் சோதித்து வெற்றியும் பெற்றார்.

தனது கண்டுபிடிப்புகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தார் முகமதுசுஹைல்.இதை அறிந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலைக்கழகம் அவரது பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச் சூட்டி பெருமைப்படுத்தியது.மாணவர்கள் தங்கள் 17 வயதில் பொதுவாக என்ன செய்வார்கள்? எந்தக் கல்லூரியில் என்ன படிப்பில் சேரலாம் என்றுதானே யோசித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் 17 வயதிலேயே இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளராக, சமூக அக்கறையாளராகத் திகழ்கிறார் முகமது சுஹைல்.அவரை பாராட்டும் விதமாக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘‘பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார்” என்ற தேசிய விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிப் பாராட்டினார். அதுமட்டுமல்ல இந்திய பிரதமர், முகமது சுஹைலை நேரில் அழைத்து பாராட்டியதோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தும் தெரிவித்தார்.அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுக்கு சொன்னது என்னவென்றால், மாணவர்கள் தங்கள் கல்வியால் பெற்ற அறிவையும், திறமையையும் கொண்டு சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.அதன் மூலம் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான்.

அதன்படி செயல்பட்டு இளம்வயதில் சாதித்து, தேசிய விருது பெற்று, அனைவராலும் பாராட்டைப் பெற்ற முகமது சுஹைலின் சாதனை இன்றைய மாணவர்களுக்கு ஒரு உன்னதப் பாடமாகும்.முகமது சுஹைலை போன்று நீங்களும் ஓர் உயர்ந்த லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை உன் உள்ளத்தில் பாயவிடு, அதைப் பற்றியே சிந்தித்திரு, கனவுகளிலும் நினைவுகளிலும் அந்த லட்சியம் வந்து வந்து செல்லட்டும். அதைப் பற்றியே பேசிக்கொண்டிரு. வெற்றி கிடைக்கும் வரை ஓயாதே! விரைந்து செயல்படு! என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதை,வெற்றி பெற போராடும் ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக் கொண்டால், நீங்களும் வெற்றியாளர்தான்.

பேராசிரியர்,
அ.முகமது அப்துல் காதர்.

The post வெற்றி பெறும் வரை ஓயாதே! விரைந்து செயல்படு! appeared first on Dinakaran.

Tags : Satishthawan ,Indian Institute of Science ,President ,Abdul Kalam ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...