×

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் திடீர் உயிரிழப்பு

சென்னை: திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் திடீரென மயங்கி விழுந்து பலியானார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சி 146வது வார்டு கவுன்சிலருமான ஆலப்பாக்கம் சண்முகம் கலந்து கொண்டார். பேரணியில் கலந்து கொண்ட அவர் திடீரென மயங்கி விழுந்தார். பேரணியில் சென்றவர்கள் அவரை அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது குறித்த தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரைந்தார். அங்கு அவரது உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

The post சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் திடீர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation Councilor ,Alappakkam Shanmugam ,Chennai ,Chennai Municipal Councilor ,Alapakkam Shanmugam ,DMK peace rally ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...