×

ரூ.2000 திருடியதாக சந்தேகம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த 6 பேர் கைது: உபியில் அரங்கேறிய கொடுமை

சித்தார்த்நகர்: உபியில் ரூ.2 ஆயிரம் திருட்டு போனது சம்மந்தமாக 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், சித்தார்த் நகர் மாவட்டம், பத்ரா பஜார் பகுதியில் கறிக்கோழி கடை உள்ளது. கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம் நேற்று முன்தினம் திருடு போனது. அப்போது அங்கே நின்றிருந்த அப்சல் மற்றும் விஜய் சகானி ஆகிய சிறுவர்கள் தான் பணத்தை திருடியிருக்க வேண்டும் என கடை உரிமையாளர் சந்தேகப்பட்டுள்ளார். இதையடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 சிறுவர்களையும் கட்டி வைத்துள்ளனர்.

இரண்டு பேருக்கும் சிறுநீரை கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் அதை குடிக்க மாட்டோம் என்று சிறுவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மேலும், மிளகாய் பொடியை தேய்த்தும், சிரிஞ்சில் பெட்ரோல் நிரப்பி உடலில் செலுத்தினர். இதில் வலி தாங்காமல் சிறுவர்கள் அழுதுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்கில் வெளியிட்டுள்ளனர்.இதில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை முகமது உசைன் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பற்றி போலீசார் கூறுகையில்,‘‘ இதில் தொடர்புடைய 8 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

The post ரூ.2000 திருடியதாக சந்தேகம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த 6 பேர் கைது: உபியில் அரங்கேறிய கொடுமை appeared first on Dinakaran.

Tags : UP ,Siddhardnagar ,Ubi ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...