×

அரசு மருத்துவமனையில் இருந்து தலக்காஞ்சேரி குப்பைமேட்டில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்:  மூச்சு திணறல், சுவாச கோளாறால் அவதி  நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர், ஆக. 6: அரசு மருத்துவமனையில் இருந்து தலக்காஞ்சேரி குப்பைமேட்டில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு, நகராட்சிக்குட்பட்ட தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே, சுமார் 50 ஆயிரம் டன்னிற்கும் மேலாக மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் அந்த, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என நகராட்சி நிர்வாகத்தினர் மாற்று இடத்தில் தரம் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தற்போது திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை 2 லாரிகளில் ஏற்றி வந்து ஒரு லாரியில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளான முககவசம், கையுறை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி உள்பட பல்வேறு பொருட்களையும் கொட்டி தெரியாமல் இருப்பதற்காக அதன்மேல், குப்பைகளை போட்டு மறைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்றபோது, மற்றொரு லாரியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு வந்த லாரி நிருபர்களை கண்டவுடன் லாரியினை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
குப்பை கிடங்கு வழியாக நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை தலக்காஞ்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது, கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரிக்காமல் இருக்கும் நிலையில் மேலும், மருத்துவ கழிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது தவிர அடிக்கடி அப்பகுதியில் குப்பைகளை கொளுத்தி விடுவதால் மூச்சு திணறல், சுவாசக் கோளாறும் ஏற்படுகின்றது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அரசு மருத்துவமனையில் இருந்து தலக்காஞ்சேரி குப்பைமேட்டில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்:  மூச்சு திணறல், சுவாச கோளாறால் அவதி  நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thalakanchery landfill ,Tiruvallur ,Thalakanchery ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...