×

திருக்கழுக்குன்றத்தில் இன்று காலை பயங்கரம்; மின்சாரம் பாய்ந்த பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி பரிதாப சாவு: கிராமமே சோகத்தில் மூழ்கியது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் இன்று காலை மின்சாரம் பாய்ந்த பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி பரிதாபமாக இறந்தார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திருக்கழுக்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுலோச்சனா (50). இவர் வழக்கம் போல, இன்று காலையில் அங்குள்ள ஒரு தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் சென்றார். இவருடன் பேரன் சபரீசன் (13) என்பவரும் சென்றார். சுலோச்சனா, தண்ணீர் பிடித்து கொண்டிந்தபோது திடீரென, மின்கம்பத்தில் சென்ற உயரழுத்த மின்வயர் அறுந்து சபரீசன் மீது விழுந்தது. இதில், சபரீசன் அலறி துடித்து கொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுலோச்சனா, சற்றும் தாமதிக்காமல் அடுத்தகணமே, பேரனை காப்பாற்ற முயன்றார். பேரனை பிடித்து இழுத்து காப்பாற்றினார். ஆனால் அதே நேரத்தில் சுலோச்சனாவின் காலில் மின்வயர் சுற்றி கொண்டது. சிறிது நேரத்தில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சுலோச்சனா சுருண்டு துடிதுடித்து இறந்தார். இதை பார்த்ததும் தெருவில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். அவர்களும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயமடைந்த சபரீசனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனையில் திரண்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்ததில் பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்
சம்பவம் நடந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் நாளை மறுநாள் திருவிழா நடக்க உள்ளது. இதற்காக இன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க முடிவு செய்தனர். திருவிழா என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால், தற்போது விபத்தை ஏற்படுத்திய மின்வயரை மாற்றியமைக்கும்படி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் கடந்த வாரம் பொதுமக்கள் புகார் செய்தனர். அவர்கள் இன்று, அந்த மின்கம்பியை மாற்ற முடிவு செய்தனர். அதற்குள் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு நடந்திருக்காது என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் இன்று காலை பயங்கரம்; மின்சாரம் பாய்ந்த பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி பரிதாப சாவு: கிராமமே சோகத்தில் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Thirukkalukunram ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும்...