×

சொத்து தகராறில் தாய் அடித்துக்கொலை மகன் கைது சந்தவாசல் அருகே பயங்கரம்

கண்ணமங்கலம், ஆக.4: திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கேளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி(69). இவரது கணவர் சக்ரபாணி 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தம்பதியினருக்கு ராஜா(37) என்ற மகனும், உமா மகேஸ்வரி(34) என்ற மகளும் உள்ளனர். உமாமகேஸ்வரி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். சிவகாமியும், மகன் ராஜாவும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சிவகாமி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது அவரது மகன் ராஜா சொத்து பிரித்து தர வேண்டும் எனக்கூறி சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, தாய் சிவகாமியை அடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

இதில், சிவகாமியின் தலை கதவில் மோதி அதிகளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே சிவகாமி இறந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது தாய் தவறி விழுந்ததாக கூறி ராஜா நாடகமாடியுள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜா தனது தாயை அடித்து தள்ளியதால் தான் இறந்தார் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராஜாவை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சொத்து தகராறில் தாய் அடித்துக்கொலை மகன் கைது சந்தவாசல் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Sandavasal ,Kannamangalam ,Chandavasal ,Tiruvannamalai district ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!