×

குடிபோதையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளை; கையில் ‘பாம்’ வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த ரவுடி கைது

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குள் குடிபோதையில் கையில் பாம் வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட பிரபல ரவுடி தர்கா மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அய்யா எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறியதால் தற்போது ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேற்று இரவு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தர்கா மோகன்(48) வந்தார்.

குடிபோதையில் இருந்த அவர், திடீரென காவல் நிலையத்தில் இருந்து பெண் தலைமை காவலர் ஜெலிபாவிடம், ‘நான் யார் தெரியுமா, சிந்தாதிரிப்பேட்டையில் மிகப்பெரிய ரவுடி, முடிந்தால் என்னை கை, கால்களை உடைத்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் பார்ப்போம். என் கையில் ‘பாம்’ இருக்கிறது’ என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் தலைமை காவலர் மற்றும் முதல் நிலை காவலர் இந்துமதி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். ரவுடி காவல்நிலையத்திற்கு வந்த போது, போலீசார் அனைவரும் ரோந்து பணி மற்றும் வாகனம் சோதனைக்கு சென்று இருந்ததால் 2 பெண் காவலர்கள் மட்டு இருந்தனர்.

ஒருகட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி தர்கா மோகன் அங்கிருந்து சென்றுவிட்டார். பிறகு சம்பவம் குறித்து பதற்றத்துடன் உயர் அதிகாரிகளுக்கு 2 பெண் காவலர்கள் தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், பாம் வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த ரவுடியை பல இடங்களில் தேடினர். 3 மணி நேரம் தேடலுக்கு பிறகு சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் பூத் அருகே ரவுடி தர்கா மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரண்டு பெண் காவலர்கள் அளித்த புகாரின் படி தனித்தனியாக ரவுடி தர்கா மோகன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய் விடாமல் தடுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைதொடர்ந்து, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல போலீசார் முயன்ற போது, உடனே ரவுடி தர்கா மோகன் எனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி இரண்டு கைகளால் நெஞ்சை பிடித்து கொண்டு கதறினார். பிறகு வேறு வழியின்றி போலீசார் ரவுடி தர்கா மோகனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி ஒருவர் குடிபோதையில் கையில் பாம் வைத்திருப்பதாக காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குடிபோதையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளை; கையில் ‘பாம்’ வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Chennai ,Rudi Dargah ,Sindhatirippetta ,Pam ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...