×

விருதுநகர் அருகே இன்று அதிகாலை கார்-கன்டெய்னர் லாரி மோதல்: 4 பேர் உடல் நசுங்கி பலி

விருதுநகர்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ஜேம்ஸ் மார்ட்டின் (34). இவர், கப்பலில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது தம்பி சாம்டேவிட்சனை (30), கப்பல் பணியில் சேர்ப்பதற்காக நேற்று இரவு கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் அவர்களது பெரியப்பா செல்வமுத்து மகன் கமலேஷ் (50) என்பவரும் காரில் வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில், மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த, விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், நான்குவழிச்சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மினி கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. கன்டெய்னர் லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது. காரில் வந்த மூவர் மற்றும் லாரியை ஓட்டி வந்த மதுரை விராதனூரைச் சேர்ந்த செல்வக்குமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கள்ளிக்குடி போலீசார், கள்ளிக்குடி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் ஒரு மணி நேரமாக போராடி மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் காரில் வந்த மூவரும் உடல் நசுங்கி, முகம் சிதைந்து உயிரிழந்த நிலையில், அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவர்களது டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு ஆகியவை மூலம் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். காரை மிக வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

The post விருதுநகர் அருகே இன்று அதிகாலை கார்-கன்டெய்னர் லாரி மோதல்: 4 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,James Martin ,Kanyakumari district ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...