×

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி சார்பில் மீண்டும் வாய்க்கால் வெட்டும் பணி: போலீசார் குவிப்பு

சேத்தியாத்தோப்பு: வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் புதிய வாய்க்கால் வெட்டும் பணி இன்று மீண்டும் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணியை துவங்க முடிவு செய்து கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், சாத்தப்பாடி, ஊ.ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 2011ம் ஆண்டில் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு 6 லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்து வழங்கினர்.

கையகப்படுத்திய நிலத்தில் என்எல்சி நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தாமல் இருந்து வந்ததால் விவசாயிகள் வழக்கம்போல் விவசாயம் செய்து வந்தனர். தந்போது என்எல்சி நிர்வாகம் இந்த விளைநில பகுதிகளில் சுரங்கம் அமைக்கவும், புதிய பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணிகளையும் திடீரென துவங்கியுள்ளது. இதனிடையே கூடுதல் இழப்பீடு, குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்த நிலையில் கடந்த 26ம் தேதி வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் வாய்க்கால் வெட்டும் பணிகளை துவங்கியது.

30க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 2வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வாய்க்கால் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று காலை வளையமாதேவி பகுதியில் கரிவெட்டி கிராமம் செல்லும் பாதை அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பின்னர், அந்த சாலைக்கு கிழக்கு பகுதியில் உள்ள நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது.

10க்கும் மேற்பட்ட ராட்சத கனரக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி 100க்கும் ேமற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி சார்பில் மீண்டும் வாய்க்கால் வெட்டும் பணி: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : NLC ,Ringamadevi ,Chettiyathopu ,Ringamadevi village ,Ring Devi Village ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...