×

100 இளம்பெண்களிடம் பாலியல் சேட்டை: வியாசர்பாடியை சேர்ந்தவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் பெண்களின் முன்புற, பின்புறங்களை தட்டி விட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, ஒரு மர்ம நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக எம்கேபி நகர் உதவி ஆணையர் தமிழ்வாணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், எஸ்ஐ சசிகுமார் தலைமையில் மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மொபெட் வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட்டினால் முகத்தை மறைத்தபடி வரும் ஒரு மர்ம நபர், நடந்து செல்லும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை வழிமறித்து, அவர்களின் முன்புற, பின்புற பகுதியில் தட்டி விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் இளம்பெண்கள், சிறுமிகள் என்பதால் யாரும் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், எம்கேபி நகர் மத்திய குறுக்கு தெருவை சேர்ந்த 37 வயது பெண் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஆகியோர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை பெற்று தீவிரமாக விசாரித்தனர். வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை பிரகாஷ் (43) என்பவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இன்று காலையில் வீட்டில் வைத்து பிரகாஷை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர் சென்னை அண்ணாசாலை, ரிச்சி தெருவில் ஒரு தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. கிரண் என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. தினமும் வேலை முடிந்து மொபெட்டில் வீடு திரும்பும்போது, இரவு நேரங்களில் வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, அவர்களது முன்புற, பின்புற பாகங்களை தட்டிவிட்டு, சிறிது தூரம் சென்றதும் நின்று, அவர்கள் கதறுவதை ரசித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post 100 இளம்பெண்களிடம் பாலியல் சேட்டை: வியாசர்பாடியை சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Wyasarbadi ,Perampur ,Vyasarbadi ,Chennai Vyasarbadi ,Wyaserbadi ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு