கடலூர்: என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார். விவசாயிகளின் நிலத்தை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்துவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அன்புமணி கைது: போராட்டக்காரர்கள் கல்வீச்சு
பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலியில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தினர். காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க போலீஸ் லேசான தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. 3 பேருக்கு மண்டை உடைந்ததை அடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வீச்சு சம்பவம்- வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
நெய்வேலியில் போராட்டக்காரர்களை எச்சரிக்க, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸ் எச்சரித்தனர். பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலியில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தினர்.
கல்வீச்சில் 6 செய்தியாளர்கள் காயம்
நெய்வேலியின் என்.எல்.சி.க்கு எதிரான பாமகவினரின் போராட்டத்தின் போது நடந்த கல்வீச்சில் 6 செய்தியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
என்எல்சி-க்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தது
நெய்வேலியில் என்.எல்.சி-க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வந்தது. போராட்டத்தின் போது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நிலைமையை காவல்துறை கட்டுக்குள் கொண்டு வந்தது. போராட்டம் நடந்த இடத்தில் தற்போதைய நிலைமை குறித்து ஐ.ஜி. கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
The post என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி அதிரடி கைது: நெய்வேலியில் உச்சகட்ட பதற்றம் appeared first on Dinakaran.