×

ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்: ஓவியர் மாருதி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

சென்னை: ஓவியர் மாருதி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி விமலா கரோனா காலத்தில் மறைந்தார்.

இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. இந்நிலையில் புனே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். ஓவியர் மாருதி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்; “தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

The post ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்: ஓவியர் மாருதி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..! appeared first on Dinakaran.

Tags : Painter ,Maruti ,G.K. ,stalin ,Chennai ,Chief Minister ,Mukhya Maruti ,G.K. Stalin ,Pudukkottai ,T. onion rao ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை