×

குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி: சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு

நாகர்கோவில்: குமரியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்டவைகளை அமல் படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நேரடியாக நடத்துவதாக அறிவித்த நிலையில், தனியார் மதுபான கடைகளில் பணியாற்றியவர்களும் டாஸ்மாக் பணியில் சேர்ந்தனர். ஆரம்பத்தில், 2 ரூபாய் மற்றும் 3 ரூபாய் சில்லறை இல்லை என்று கூறி தனியார் கடைகளில் இருந்து வந்தவர்கள் லாபம் பார்த்தனர். அதன் பிறகு படிப்படியாக இது பிற ஊழியர்களிடமும் பரவியது. இதுகுறித்த புகார்களை அடுத்து தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தும் போது, விலையை 5 ஆகவும் பின்னர் 10 ஆகவும் ரவுண்ட் செய்தனர். இந்தநிலையில் மாவட்ட மேலாளர் தொடங்கி, மண்டல அலுவலர் வரை மாதம் தோறும் மாமூல் பெறப்பட்டதை அடுத்து, தற்போது குவாட்டர் மது பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலித்து வருகின்றனர்.

முன்பு குறைந்த விலை மதுபானங்களுக்கு மட்டும் வசூலித்தனர். ப்ரீமியம் வகை மது பாட்டில்கள் விற்பனை விலைக்கே விற்கப்பட்டன. தற்போது எந்த வகை மது என்றாலும், குவாட்டருக்கு 5 முதல் 10 வரை கட்டாயம் தந்தாக வேண்டும். புல் பாட்டில் என்றால், ரூ.20 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர் என்ற புகார் அதிக அளவில் எழுந்தது. எனவே கேரளா போன்று மதுபானத்திற்கு பணம் செலுத்தி ரசீது பெற ஒரு கவுண்டரும், ரசீதை கொடுத்து விட்டு மதுபாட்டில்களை பெற்று செல்ல மற்றொரு கவுண்டர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்ைகயும் எழுந்து உள்ளது. இந்தநிலையில், அமைச்சர் முத்துசாமி, மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்ைக பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும், அனைவருக்கும் ரசீது வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அதன்படி அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகங்களுக்கும் மாதிரி க்யூ ஆர்கோர்டு உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது மதுபானங்களின் விலையை கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது வழங்குவதுடன், அங்குள்ள க்யூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து பணத்தை யூபிஐ மூலம் செலுத்த வேண்டும். பின்னர் ரசீதை தந்து மதுபாட்டில்களை பெற்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக கடைகளில் 2 கவுண்டர்கள் அமைத்தல், வரிசையில் நின்று மது பிரியர்கள் வாங்கும் இடவசதி போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மதுபாட்டில்களை இறக்கும்போது, இறக்கு கூலி, கூடுதல் மின்கட்டணம், கடை வாடகை, உடைந்த மதுபாட்டில்களுக்கு உரிய பணம் ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியர்கள் தான் செலுத்தி வருகின்றனர். இந்த செலவுத் தொகையை பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கும் பணத்தில் சரி செய்கின்றனர். ஆனால் பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்க கூடாது என்றால், இந்த செலவுகளை யார் செலுத்துவார்கள் என்ற கேள்வியும் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகமும் டெட்ரா பேக் மற்றும் பெட் பாட்டில்களில் மதுபானங்களை விற்பனை செய்வது பற்றியும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கண்ணில் படாத ஸ்வைப் இயந்திரங்கள்
டாஸ்மாக்கில் ஏடிஎம் கார்டுகள் மூலம் ஸ்வைப் செய்து பணம் செலுத்தும் வசதி ஏற்கனவே நடை முறையில் உள்ளது. இதில் பணம் கூடுதலாக வாங்க முடியாது என்பதால், எந்த கடைகளிலும் ஸ்வைப் இயந்திரம் மது பிரியர்கள் கண்ணில் படுவதே இல்லை. முறைகேடுகளை தடுக்க 15 சதவீத விற்பனை இந்த இயந்திரங்கள் மூலம் பெற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டும் எந்த பலனுமில்லை. இந்த இயந்திரங்கள் தரம் குறைந்தவை என்பதால், சில பகுதிகளில் இயந்திரங்கள் இருந்தும் பண பரிவர்த்தனை சரிவர இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முறைகேடுகள் குறையும்
தற்போது சில கடைகளில் கூடுதல் பணம் மூலம் தினசரி ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வருவாய் வருவதால், காலை பணிக்கு வரும் போதே மது அருந்தி விட்டு, மதுபான நிறுவனங்களின் விற்பனை பிரதிநிதிகளை தன்னிச்சையாக ஊழியர்களாக நியமித்து, அவர்களுக்கு மது பானம் அல்லது சில நூறுகளை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் பணத்தையும் தங்களது தேவைக்கு எடுத்து விட்டு, மது வகைகள் குறித்து அதிகாரிகள் திடீர் கணக்கு எடுக்கும் போது, விற்பனை செய்யப்பட்டதாக கூறி பணத்தை செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆன்லைன் முறை வரும் போது இந்த முறைகேடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

The post குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி: சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kumari District ,Tasmak ,Satiya Components ,Nagarko ,Kumary ,Kumari District Tasmac ,Satya ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!