*குப்பைகளை உண்ணும் பரிதாபம்
ஊட்டி : பர்லியார் பகுதியில், ஒற்றைக்காட்டு யானை இடது பின்னங்காலில் காயத்துடன் சுற்றித்திரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிக்கு உணவு தேடி வரும்போது, மனித -விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனினும், இவைகள் மக்கள் வாழும் பகுதிக்கு வருவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் இவற்றை உண்பதற்காக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மலைப் பகுதியான பர்லியார் மற்றும் மரப்பாலம் பகுதிக்கு வந்துள்ளன.இதில், கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக சுற்றி வரும் ஒற்றை யானையின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டு யானையால் வனப்பகுதிக்குள் உணவு தேடி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பர்லியார் பகுதியில் தற்போது ஆற்றோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உணவாக உட்கொண்டு வருகிறது. நடக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ள வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post பர்லியார் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரியும் யானை appeared first on Dinakaran.